Tamil News

Tuesday, January 10, 2012

சென்னையை பெருமைப்படுத்தும் மெரினா!



சிவகார்த்திகேயன், ஓவியா மற்றும் 'பசங்க' பக்கடா உள்ளிட்ட 13 சிறுவர்கள் நடிப்பில் வெளிவரப் போகும் படம், மெரினா. பசங்க படத்தின் இயக்குநரான பாண்டிராஜ் இந்தப் படத்தை இயக்கியிருப்பதோடு, தயாரித்தும் உள்ளார். இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழா ஜனவரி 9&ம் தேதி மெரினா கடற்கரையில் நடைபெற உள்ளது. நா. முத்துக்குமாரும், யுகபாரதியும் பாடல்கள் எழுத, புதியவரான க்ரிஷ் இசை அமைத்து இருக்கிறார். இதில் இன்றைய சென்னையை அப்படியே படம்பிடித்துக் காட்டும் வகையில் ஒரு பாடலை எழுதி இருக்கிறார் நா.முத்துக்குமார். "சென்னையைப் பற்றி பல பாடல்கள் வெளிவந்துள்ளன. ஆனால், இந்தப்பாடல் சென்னை மாநகரத்தின் ஆன்மாவை பன்முகத்தன்மையோடு படம்பிடித்துக் காட்டுவதாக இருக்கும். அங்குள்ள மக்களின் சுகம், துக்கம், ஆனந்தம், எதிர்பார்ப்பு, நம்பிக்கை என எல்லாவற்றையும் இந்தப்பாடலில் கொண்டு வந்திருக்கிறேன்!" என்கிறார் நா.முத்துக்குமார். அந்தப்பாடல் இங்கே...

வணக்கம் வாழ வைக்கும் சென்னை பிடிக்குதுண்னை
உனக்கு ஈடு இல்லையே..!
மிரட்டி ஓட வைக்கும் சென்னை மிரட்டுது என்னை
இருந்தும் ஓடவில்லையே..!

வங்கக் கடல் விட்டு விட்டு அலை அடிக்கும்,
இங்கே வஞ்சிர மீன் வாசத்துல வலை விரிக்கும்..!
பர பர பரவென பர பரக்கும்,
இங்கு பக்கத்து வீட்டுக்காரன் பேர் மறக்கும்..!

(வணக்கம்...)

வத்திபட்டி போல இங்கு வீடிருக்கும்,
தெரு சுத்தி எங்கும் காங்கிரீட் காடு இருக்கும்..!
மூச்சு முட்ட நெரிசலில் ரோடிருக்கும்,
அதில் மாட்டு வண்டி தொட்டியில பூ சிரிக்கும்..!
எத்தனை கண்கள் இங்கு பசித்திருக்கும்...
இது அத்தனை கனவையும் நிறைவேத்தும்..!

(வணக்கம்...)

கட்சிக்கொடி கூட்டணியா கை அசைக்கும்,
நமக்கு அருணா கொடிதான் மிச்சம் இருக்கும்..!
பச்சை மஞ்ச சிவப்புல தான் சிக்னல் இருக்கும்,
அது விழுந்ததும் கொழந்தைங்க பிச்சை எடுக்கும்..!

(மிரட்டி ஓட வைக்கும்)

சிங்காரச் சென்னை என்று சொல்லுவோம்..
ஊர் எங்கும் போஸ்டர் ஒட்டிக் கொள்ளுவோம்..!
சேரோடும் கூவம் எங்கும் கொசுக்களே...
என்றாலும் விட்டுப் போக நெனைக்கல
இன்பம் துன்பம் ரெண்டும் உள்ள சென்னையடா,
இது இளைப்பாற இடம் தரும் திண்ணையடா..!
நாகரீகம் வளர்ந்திடும் தொட்டிலடா,
இந்த விளக்கிலே எத்தனையோ விட்டிலடா..!
பல ஊரு சனம் வந்து வாழும் இடந்தான்
அட! பத்து நாளில் சொந்த ஊரு இந்த இடந்தான்

(வணக்கம்...)

உலகத்தில் அழகிய கடற்கரை தான்...
இந்த மெரினாவில் கிடைக்கும் பல கதைதான்..!
சுண்டல், பஜ்ஜி, காத்தாடி, குதிரை தடம்...
இங்க உள்ளவங்க வாழ்க்கையெல்லாம் ரெங்கராட்டினம்..!

எல்லோருக்கும் தனித்தனியா தாய் இருப்பா...
நம்ம ஒட்டுமொத்த தாயாக சென்னை இருப்பா..!
எப்படி நீ திட்டும் போதும் உன்னை பொறுப்பா...
அவ உன்னுடைய வளர்ச்சிக்கு ஏணி கொடுப்பா..!
உலகத்தில் பல கோடி ஊர் இருக்கும்
இந்த ஊர் போல பன்முகம் எதில் இருக்கும்..!

No comments:

Post a Comment